2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வேலூர் தொகுதியைத் தவிர 38 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 71.90% வாக்குகள் பதிவாகியிருந்தன.
இது சராசரி அளவுதான் என்றாலும், பல்வேறு காரணிகளால் இது குறையாமல் போனதே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
சரி நேராக விஷயத்துக்கு வருவோம். அதாவது 2014, 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளின் விவரம் தொகுதிவாரியாக ஒரு ஒப்பீடு செய்து பார்த்ததில் சில ஒற்றுமைகள் நமக்குத் தெரிய வந்தன.
அதன்படி பார்த்தால் இவ்விரு தேர்தல்களிலும் சில தொகுதிகளில் மட்டும் 80 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. 70 என்பதே சராசரி அளவாக இருக்கும் போது 80 சதவீதம் என்பது நிச்சயம் வரவேற்கத்தக்கதே.
அந்த வகையில் தருமபுரி (2014-81.14%, 2019-80.49%) ஆரணி (2014-79.99%, 2019-81.30%), கரூர் (2014-80.46%, 2019-79.11%), பெரம்பலூர் (2014-80.02%, 2019-78.70%), சிதம்பரம் (2014 - 79.61%, 2019-77.72%) மற்றும் புதுச்சேரியில் (2014-81.98%, 2019-80.49%) வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதே போல மதுரையில் மீனாட்சியம்மன் திருக்கோயில் திருவிழாவினால் வாக்குப்பதிவு குறையும் என்ற குற்றச்சாட்டினை அப்பகுதி மக்கள் பொய்யாக்கியுள்ளனர். அதாவது 2014ம் ஆண்டு மதுரையில் 67.88% வாக்குகளே பதிவான நிலையில், இம்முறை 65.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி பார்த்தால் 2.11 சதவீத வாக்குகள்தான் குறைந்துள்ளது. இது மற்ற தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சராசரியான குறைவுதான் என்கின்றன புள்ளி விவரம்.
எனவே தமிழக மக்களே, மேற்சொன்ன தருமபுரி, ஆரணி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி தொகுதி வாழ் மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில், பிற தொகுதி மக்களை விட ஒரு படி உயர்ந்து நிற்கிறார்கள் என்றால் அது மிகையில்லைத்தானே?