கரூர் மக்களவைத் தேர்தல் அதிகாரிக்கு எதிராக கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்தன. அந்த சமயத்தில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சியினரின் மனுவை ஒற்றை சாளர முறையில் கரூர் மக்களவை தேர்தல் அதிகாரி பரிசீலிக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியினரின் மனுவை மட்டும் உடனடியாக ஏற்றுக்கொண்டு தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.
தேர்தல் அதிகாரியின் இந்த செயல் பாரபட்சமானது. எனவே தேர்தல் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு புகார் மனு அளித்தேன். அந்தப் புகார் மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.