வங்கக் கடலில் உருவாகும் புயல் சின்னம் தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கரையை கடக்குமா அல்லது கரையை ஒட்டிச் செல்லுமா என்பது ஓரிரு நாளில் தெரியும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், தெற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 26ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27, 28ம் தேதிகளில் புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழகக் கடற்கரையை நோக்கி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நகர்ந்து வருகிறது.
எனவே, மீனவர்கள் 26ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கோடை மழை காரணமாக புதுக்கோட்டை கீரனூர், வால்பாறை பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.