பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: போலீஸ் கேட்ட விவரங்களை வெளியிட வாட்ஸ்ஆப் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் கேட்டிருந்த விவரங்களை வெளியிட வாட்ஸ்ஆப் நிறுவனம் மறுத்துவிட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: போலீஸ் கேட்ட விவரங்களை வெளியிட வாட்ஸ்ஆப் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் கேட்டிருந்த விவரங்களை வெளியிட வாட்ஸ்ஆப் நிறுவனம் மறுத்துவிட்டது.

பொள்ளாச்சியில் பல இளம்பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், 'பார்' நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  தலைமறைவாக இருந்த மணிவண்ணன் சரணடைந்தான்.

இதில், மணிவண்ணனின் ஃபேஸ்புக் தொடர்புகள், வியாபாரத் தொடர்புகள், திருநாவுக்கரசுடன் இருந்த நட்பு உள்ளிட்டவை குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். இதன்மூலம் இந்த வழக்கில் சிக்காத பலருடைய பெயர்களையும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்களும் விரைவில் வழக்கில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது வாட்ஸ்ஆப் உரையாடல்களை மணிவண்ணன் அழிக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அழித்த உரையாடல்கள், தகவல்கள் உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வாட்ஆப் நிறுவனம் தர மறுத்துவிட்டதாக தமிழக போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனங்களிடம் விவரங்கள் கோரி எழுத்து ரீதியிலாக விளக்கம் கேட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இதுபோன்ற சைபர் கிரிமினல் வழக்குகளில் தடை ஏற்படுவதாகவும் தமிழக அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. 

இதனிடையே, போதிய ஒத்துழைப்பு தராத சமூக ஊடகங்கள் இயங்க ஏன் தடை விதிக்கக் கூடாது என்று பொதுநல வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், இந்திய தகவல்தொழில்நுட்பப் பிரிவு சட்டத்தின் அடிப்படையில் பல சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவுக்கான சட்டப் பிரதிநிதியை இன்னும் நியமிக்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com