சென்னை: கோவையில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் (வடக்கு) வட்டம், பன்னிமடை கிராமம், கஸ்தூரிநாயக்கன்புதூர் மஜரா திப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது பெண் குழந்தை 25.3.2019 அன்று பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூரச் செயலுக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.