பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை வழங்குவது குறித்து மத்திய தொலை தொடர்புத் துறை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் தாக்கல் செய்த மனு: நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சேவையை வழங்கி வருகிறது.
ஆனால் மற்ற தனியார் செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் அனைத்தும் அதிவேக சேவையான 4ஜி சேவையை வழங்கி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அதிவேக சேவையை வழங்கி வரும் நிலையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4 ஜி சேவையை வழங்க முன்வரவில்லை.
இதனால் பல தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தான் லாபம் அடைகின்றன.
மத்திய தொலைத் தொடர்பு துறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலட்சியத்தால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பிஎஸ்என்எல் சேவையினால் கிடைக்கும் வருவாய் அரசுக்கு கிடைக்கும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் 4 ஜி சேவையை விரைந்து வழங்க மத்திய அரசுக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து, மத்திய தொலை தொடர்புத் துறை மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.