சென்னை: இணையதளக் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்க பயனாளர்களின் சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று கடந்த ஆண்டு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இணையதளக் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கானது உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணி பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
இணையதளக் குற்றங்களை தடுப்பது தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதள பிரதிநிதிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
இதற்காக தலைமைச் செயலர் தலைமையில் உயரதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை ஏப்ரல் 27-ஆம் தேதிக்குள் உருவாக்க வேண்டும்.
அந்த குழுவானது பேச்சுவார்தை நடத்திய விபரங்களை தலைமைச்செயலாளர் ஜூன் 6ல் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.