சென்னை: வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் விளக்கம் அளித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யகோபால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். முன்னெச்சரிக்கை மற்றும் புயலின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
புயல் முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29ம் தேதி முதல் புயல் சின்னம் காரணமாக தமிழகக் கடற்கரையில் 90 கி.மீ. வரை சுழற்காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைக்கேற்ப பேரிடர் மீட்புப் படையினர் முன்கூட்டியே முக்கியப் பகுதிகளில் நிறுத்தப்படுவார்கள். தேசிய மாணவர் படையையும் மீட்புக் குழுவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் உணவுப் பொருட்களை மாவட்டங்களுக்கு விநியோகிக்கவும், 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. புயல் வருவதற்கு முன்பே, முக்கிய இடங்கள் வீடுகளில் இருக்கும் மேல்நிலைத் தொட்டிகளை நிரப்ப அறிவுறுத்தப்படும்.
மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு படகுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கீழ் தளங்களில் வைக்கப்படும் ஜெனரேட்டர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், தேவையான டீசலை இருப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், மருந்துகளை இருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சத்யகோபால் தெரிவித்துள்ளார்.