பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் தமிழக அரசு, டிஜிபி, கோவை எஸ்பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கிய "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்த் ஆகியோர் மீது போலீஸார் அடிதடி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதில் பார் நாகராஜ் தவிர மற்றவர்கள் சிறையில் உள்ளனர். அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் மார்ச் 25 ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டிஜிபி, கோவை எஸ்பி, பொள்ளாச்சி நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் ஜூன் 7ம் தேதி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.