அதி தீவிர புயலாக மாறுகிறது பானி தமிழகத்தில் மிதமான மழைக்கே வாய்ப்பு

வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 910 கி.மீ. தொலைவில் "பானி' புயல் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, திங்கள்கிழமை அதி தீவிர புயலாக மாறவுள்ளது. புயல் தென் தமிழக கடற்கரைக்கு 200 கி.மீ.
அதி தீவிர புயலாக மாறுகிறது பானி   தமிழகத்தில் மிதமான மழைக்கே வாய்ப்பு

வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 910 கி.மீ. தொலைவில் "பானி' புயல் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, திங்கள்கிழமை அதி தீவிர புயலாக மாறவுள்ளது. புயல் தென் தமிழக கடற்கரைக்கு 200 கி.மீ. தொலைவில் வரும்போது, சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை புயலாக மாறி, தென்கிழக்கு வங்கக்கடல் அதையொட்டிய இந்தியக்கடலில் மையம் கொண்டிருந்தது. 
இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை நேர நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 910 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. 
இது ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி, மணிக்கு 20 கி.மீ. வேகத்தில்  வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்தது.  பானி புயல் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் வடதமிழகம்-தென் ஆந்திர கடற்கரைக்கு 300 கி.மீ. அருகில் வந்து,  அதன்பிறகு, திசை மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகரவுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: இந்தப் புயல் மேலும் வலுவடைந்து, தீவிர புயலாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் வலுபெறக்கூடும்.  வடமேற்கு திசையில் நகர்ந்து ஏப்ரல் 30, மே 1-ஆம் தேதி வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை ஒட்டிய கடற்கரை பகுதியில்  300 கி.மீ. தொலைவு வரை வரக்கூடும். 
அதன்பிறகு, திசை மாறி, வடக்கு, வடகிழக்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு இல்லை. 
மேலும், நேரடியான பாதிப்பு இல்லை. இந்த புயல் வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை ஒட்டிய பகுதியில் நெருங்கி வரும் வேளையில் வடதமிழகம் பகுதிகளில்  ஒரு சில பகுதியில் லேசான முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். 
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் ஏப்ரல் 29, 30, மே 1-ஆகிய தேதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்ப  வேண்டுமன அறிவுறுத்தப்படுகின்றனர். 
வெப்பநிலை உயர வாய்ப்பு: இந்தப் புயல் தற்போது 1,500 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது வடதமிழகத்துக்கு 300 கி.மீ. தொலைவு வரை  வந்து, திசை மாறி செல்லக்கூடிய நிலையில் உள்ளது. வடக்கு, வடமேற்கு திசை காற்றும் வீசி, வெப்பநிலை உயரலாம். புயல் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்ல, செல்ல வெப்பநிலை உயரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com