திருச்சானூர் கோயிலில் பக்தர்களுக்கு தரமான குங்குமத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் தெரிவித்தார்.
அவர் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான ஆய்வை மேற்கொண்ட பின், செய்தியாளர்களிடம் கூறியது:
தேவஸ்தான இணையதளத்தில் ஏழுமலையான் கோயில் தவிர தேவஸ்தானம் நிர்வகிக்கும் மற்ற கோயில்களின் விவரங்கள், வாடகை அறை முன்பதிவு, தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இது தவிர, புதிதாக கூடுதல் தகவல்களை அதில் வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை , அன்னதானம், முடி காணிக்கை சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கை, உண்டியல் வருமானம் போன்ற விவரங்களை தேவஸ்தான இணையதளத்தில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கருத்துகளை அறிந்து இணையதளப் பக்கங்களை மேலும் மெருகேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயில் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும், விடியோ பதிவுகளும் இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளன. இதை இலவசமாக செய்து தர ஹைதராபாதைச் சேர்ந்த "திரஷோல்ட் சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் முன்வந்துள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வழங்கப்படும் குங்குமம் தரமற்றதாக உள்ளது என்று புகார் வந்துள்ளது.
எனவே, இக்கோயிலில் பக்தர்களுக்கு தரமான குங்குமத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் தரிசன டிக்கெட் மற்றும் பிரசாதம் வழங்கும் இடத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.