புயல் எச்சரிக்கையை மீறி சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்தனர்.
"பானி' புயலால் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்ட போதிலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மே 1-ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.
மேலும், கோடை விடுமுறையால் சிறுவர், சிறுமியர் குடும்பத்துடன் வந்தவண்ணம் உள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையிலும், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளித்தனர்.