சென்னை: பணிமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த விவகாரம் தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற கோரி தேர்தல் ஆணையதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை ஏற்று புதிய ஆட்சியராக எஸ். நாகராஜனை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்ட நாகராஜன் ஞாயிறன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக இவர் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தார்.
அதேசமயம், முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, நடராசன் தனது முறையீட்டை முன்வைத்தார்.
அவர் தனது மனுவில் மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த விவகாரத்தில் தனது தரப்பு என்ன என்பது குறித்து கேட்காமலே பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.