சென்னை: மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊழியர்கள் நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி 8 பேரை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியது: நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுதல், பணியில் ஒழுங்கீனமாக செயல்படுதல், நிறுவனத்துக்கு எதிரான தவறான தொடர்பு போன்ற காரணங்களால், 2 போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், 3 தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள், நிலையக் கட்டுப்பாட்டாளர்கள் இருவர், ஒரு இளநிலை பொறியாளர் என 8 பேர் கடந்த டிசம்பரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த விளக்கம் திருப்தியில்லாததால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இதற்கிடையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களில் ஒரு பிரிவினர் திங்கள்கிழமை மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக ஊழியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு நிலையங்களில் 5 முதல் 15 நிமிஷம் வரை மெட்ரோ ரயில் சேவை பாதித்தது. அதன்பிறகு, ரயில் சேவை குறைக்கப்பட்டது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக பணியாளர்கள் கூறியது: நிரந்தரப் பணியாளர்களான தங்களுக்கு நிர்வாகம் பல்வேறு வழிகளில் சிரமத்தை கொடுக்கிறது. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு, படி உயர்வு வழங்குகிறது. ஆனால், எங்களுக்கு குறைவான ஊதியமே வழங்குகிறது என்றனர்.
இந்நிலையில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று மெட்ரோ ஊழியர்கள் தரப்பு, நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகிய முத்தரப்பினர் இடையே பேச்சுவார்தை நடந்தது.
பேச்சுவார்த்தையின் முடிவில் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை
8 ஊழியர்கள் மீதான பணிநீக்கத்தை திரும்பப் பெற மெட்ரோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை
ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் மெட்ரோ நிர்வாகத்திற்கு அக்கறை இல்லை
நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.