கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி நாளை தொடக்கம்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆக.2) தொடங்குகின்றன.
கொல்லிமலையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை (ஆக.2, 3) ஆகிய இரு நாள்கள், வாழவந்தி நாடு, செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, கொல்லிமலையில் மலைப் பாதைகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தொடக்கி வைத்தார். கொல்லிமலை வட்டாரத்துக்குள்பட்ட காரவள்ளி பகுதியில் மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு பணி மேற்கொள்ளப்பட்டது. அப் பகுதிகளில் நெகிழி மற்றும் குப்பைகளைப் போடாமல் பாதுகாத்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: கொல்லிமலையில் ஆகஸ்ட் 2, 3 - தேதிகளில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மலைப் பாதைகள், சுற்றுலாத் தலங்கள்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவியர் குப்பைகளை அகற்றும் துப்புரவுப் பணியைச் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, வாசலூர்ப்பட்டி தாவரவியல் பூங்காவில், தோட்டக் கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வல்வில் ஓரி விழாவின் தொடக்க நாளன்று பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர் கொட்டுகிறது. பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தருவதால், குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் இவ் விழாவுக்கு வரும்போது நெகிழிப் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளுக்காக, அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தேவையான பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா, செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.