தொரட்டி படத்தில் நடித்த பொள்ளாச்சியைச் சேர்ந்த நாயகி, தான் அடைத்து வைக்கப்படவில்லை என்று போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் சத்யகலா (26). இவர் ஷமன்மித்ரு என்ற திரைப்பட இயக்குநர் தயாரித்து நடித்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திரைப்படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான ஷமன்மித்ரு, சத்யகலாவை பெற்றோர்கள் அடைத்து வைத்துள்ளதாக தபால் வாயிலாகப் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்திருந்தார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸாருக்கு அந்தப் புகார் கடிதம் கடந்த 29ஆம் தேதி கிடைத்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஷமன்மித்ரு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, சத்யகலா நிலை குறித்து மகாலிங்கபுரம் போலீஸார் பதில் அளிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் இருந்த சத்யகலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தான் அடைத்துவைக்கப்படவில்லை என்றும், பெற்றோர்களுடன்தான் உள்ளேன் என்றும், இயக்குநருக்கும், எனக்கும் சிறிய கருத்து வேறுபாடு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.