போரூர் ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் புதிதாக இரு பி.டெக் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த அப்படிப்புகளுக்கு மாணவர்கள் இடையே அதிக வரவேற்பு இருப்பதாக ராமச்சந்திரா கல்வி நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கல்வி நிறுவன வளாகத்தில் அப்படிப்புகளை முறைப்படி அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதில், கல்வி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலம், துணைவேந்தர் விஜயராகவன், துறைத் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது மருத்துவம் சார்ந்த நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்து வரும் நிலையில், அதுதொடர்பான படிப்பை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியமானது என்று துணைவேந்தர் விஜயராகவன் நிகழ்ச்சியில் பேசினார். மேலும், ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரு புதிய படிப்புகளில் உள்ள 120 இடங்கள் 115 இடங்கள் நிரம்பிவிட்டதாக தெரிவித்தார்.