ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உத்தவிட்டுள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடவேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம் பெட்ரோலியத் துறைக்கு அனுப்பப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து ஜூன் 28-ஆம் தேதி பதில் கடிதம் வந்தது.
இதற்கிடையில், இப்பிரச்னை தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்பி டி. ஆர். பாலுவுக்குப் பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான், நமது கடிதம் குறித்து குறிப்பிட்டு, விரைவில் அழைத்துப் பேசுவதாகக் கூறினார். இந்நிலையில், காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அத்திட்ட இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் தனக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.