சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 14 இடங்களில் பேரிடருக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் எப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான செயல் விளக்கக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகம் பகுதியில் கடற்படையின் ஒத்துழைப்புடன் பேரிடருக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது. மேலும், சென்னை சீனிவாசபுரம், தீவுத்திடல், கடலூர் கிள்ளை வடக்கு, கன்னியாகுமரி சின்னவிளை, நாகப்பட்டினம் வானகிரி, புதுக்கோட்டை கோட்டைபட்டினம், ராமநாதபுரம் தொண்டி, கல்பார், தஞ்சாவூர் காரண்குடா, தூத்துக்குடி கொம்புதுரை, திருநெல்வேலி கூடுதாழை, திருவள்ளூர் பழவேற்காடு, திருவாரூர் தில்லைவிளாகம், விழுப்புரம் எக்கியர்குப்பம் ஆகிய இடங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இது ஒத்திகைப் பயிற்சி என்பதால் பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.