பாமர மக்களைப் பாதுகாக்கவே நாடாளுமன்றத்தில் அவசரம், அவசரமாக மசோதாக்கள் கொண்டுவரப்படுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்ற செயல்பாடுகளால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாக்கவும், மக்களின் நலனுக்காகவும் அனைத்து மசோதாக்களும் அவசரம், அவசரமாக கொண்டுவரப்படுகின்றன.
முன்பு மருத்துவப் படிப்பில் சேர ஒருமுறை மட்டுமே வாய்ப்பு இருந்த நிலையில், நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதன் மூலம் மூன்று முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்கள் தவறான முடிவுக்கு ஆளாகாமல், அடுத்தடுத்த வாய்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்துத் தரப்பாலும் நீட் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. காவிரியில் தமிழகத்தின் உரிமையைக் கேட்டுப் பெறுவதிலும், தமிழர் நலனுக்கான செயல்பாடுகளிலும் ஒருபோதும் தமிழக பாஜக பின்வாங்காது. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வந்த காரணத்தினாலேயே காவிரியில் தண்ணீர் கிடைத்துள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தல் தனித்தேர்தலாக நடைபெறுவதற்கு திமுக-வின் தவறான நடவடிக்கைகளே காரணமாக அமைந்தன. கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், இந்தியாவிலேயே தேர்தல் நிறுத்தப்பட்ட தொகுதியாக வேலூர் அமைந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது விதிகளுக்கு புறம்பாக கூட்டம் நடத்திவிட்டு, நடவடிக்கை எடுத்தால் காழ்ப்புணர்வு என திமுக புகார் கூறுகிறது. பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என யாராக இருந்தாலும் சட்டத்துக்குள்பட்டவர்களே. திமுக-வும், மு.க.ஸ்டாலினும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.
ஜூலை தொடங்கி ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை, நாடு முழுவதும் பாஜக-வுக்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த இயக்கத்தின் மூலம் பல லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மிஸ்டு கால் மூலமாகவும் சேர்க்கை நடைபெறுகிறது என்றார் அவர்.