காஞ்சிபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினும் அத்திவரதரை நேரடியாகத் தரிசிக்கும் காலம் விரைவில் வரும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஞாயிறன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசித்தார். அதேபோல பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ஞாயிறன்று அத்திரவரதைத் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
திமுகவைச் சேர்ந்த ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது. ஏன் ஸ்டாலின் கூட நாத்திகர் கிடையாது. அவருக்கும் எல்லா நம்பிக்கைகளும் இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின், அவரின் தாய், மனைவி மூலம் இறை நம்பிக்கைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார். அதனை நான் கண்டிப்பாக வரவேற்கிறேன். விமர்சிக்கவில்லை.
அதுபோல ஸ்டாலினும் அத்திவரதரை நேரடியாகத் தரிசிக்கும் காலம் விரைவில் வரும். ஏனெனில் திமுக தொண்டர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள். அவர் மட்டும்தான் இன்னும் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கிறார்.
தொண்டர்கள் வழிதான் தனது வழி என்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருகிறார். தொண்டர்கள் எல்லோரும் இப்போது மாறிவிட்டார்கள். அப்படியெனில் இனி அவரும் மாற வேண்டியதுதானே? ஸ்டாலின் கூட வரட்டும்; வந்து அத்திவரதரை தரிசிக்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.