சுதந்திர தின விழாவில் பள்ளிகளில் மரக்கன்றுகள் நட வேண்டும்: கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் மரக்கன்றுகள் நட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் மரக்கன்றுகள் நட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அனைத்து வகைப் பள்ளிகளிலும் மிகச் சிறப்பான முறையில் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தின விழாவைக் கொண்டாட வேண்டும். இதையொட்டி, பள்ளி அளவிலும், ஒன்றிய அளவிலும் மாணவர்களிடையே நாட்டுப் பற்றையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசுகள் வழங்க வேண்டும்.
 அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். நாட்டுப் பற்று, பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். சுதந்திர தின விழாவில் கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்- ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி புரவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை பங்கு பெறச் செய்ய வேண்டும். சுதந்திர தின விழா அன்று அனைத்துப் பள்ளிகளிலும் உரிய இடங்களைத் தேர்வு செய்து மரக் கன்றுகளை நட்டு அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com