டெங்கு காய்ச்சலால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரங்களையும், தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

"ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டிலேயே கர்நாடகத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 1,400-க்கும் அதிகமானோர் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டும் மாநிலத்தில் 1,200-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:

டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது. இருந்தபோதிலும் அதனை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் அனைத்துத் துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுகாதாரத் துறை செயல்பட்டு வருகிறது.

பயனற்ற பொருள்களை முறையாக அகற்ற வேண்டும் என்றும் அதில் மழைநீரை தேங்கவிடக் கூடாது என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும், இளம் தலைமுறையினரிடையேயும் டெங்கு குறித்த புரிதலை ஏற்படுத்தி வருகிறோம்.

உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினரும், சுகாதாரத் துறையினரும் நேரடியாகச் சென்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com