குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலாப்பயணிகள் நீண்டவரிசையில் நின்று குளித்துச் சென்றனர்.
குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களும் குற்றாலம் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசியது. எனினும், மலைப் பகுதியில் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிக்கவில்லை. பேரருவி, ஐந்தருவியில் மிகவும் குறைந்த அளவில் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்துச் சென்றனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. புலியருவியில் தண்ணீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. அருவிகள் ஏமாற்றம் அளித்தாலும் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களிலும், படகு சவாரியிலும் ஈடுபட்டு உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.