சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் டமால் டுமீல் மழையெல்லாம் இருக்காது, ஆனால் நிச்சயம் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, சென்னையை சுற்றிலும் ஒரு கருப்பு நிற மேகக் கூட்டங்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதனால், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது மிக சிறப்பானதொரு வானிலை நிலவுகிறது.
பலமான மேகக் கூட்டங்கள் இருந்தாலும் டமால் டுமீல் மழையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நிச்சயம் மழை பெய்யும். ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால் நல்ல மழையை நேரில் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தின் போது பெய்த மழையை யாராவது மறந்திருக்க முடியுமா? ஆனால் அதையெல்லாம் நினைவுபடுத்துவது, அதுபோன்றதொரு மழை பெய்யும் என்று சொல்வதற்காக அல்ல.
ஆனால் நிச்சயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் ஒரு சிறப்பான மாவட்டங்கள்தான். எதுவும் சொன்னபடி நடக்காது.
இந்த வாரம் நிச்சயம் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகள், கேரளா, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மழையால் கபினியும், ஹேமாவதியும் நீர் வரத்தை கணிசமாகப் பெறும் என்று தெரிவித்துள்ளார்.