நடிகர் ஜெய் நடித்துள்ள "பலூன்' திரைப்படத்தை தெலுங்கு மொழியில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
70 எம்.எம். எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் அதர்வா நடித்த "100' என்ற திரைப்படத்தை தயாரித்த எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், நடிகர் ஜெய் நடித்த "பலூன்' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைக்காக தர வேண்டிய தொகையில் ரூ.1 கோடி பாக்கி வைத்துள்ளது. அத்தொகையைத் தரும் வரை "100' என்ற திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "100' என்ற படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். இந்தத் தடையை நீக்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது ரூ.1 கோடி பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுவதாக எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம் உத்தரவாதம் அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், 70 எம்.எம். நிறுவனம் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 70 எம்.எம். நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய்சுப்பிரமணியன், ரூ.1 கோடி பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுவதாக அளித்த உத்தரவாதத்தை எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம் நிறைவேற்றவில்லை என்றார்.
இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை எம்.ஜி.ஆரா நிறுவனம் நிறைவேற்றத் தவறியதால் "பலூன்' திரைப்படத்தை தெலுங்கிலும், "100' என்ற திரைப்படத்தை தொலைக்காட்சி அல்லது அமேசான் போன்ற பிற இணையதளங்களிலும் வெளியிட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.