தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் சாகுபடியை அதிகரிக்க பாசன வசதியில்லாத இடங்களில் நீர்ப்பாசனத்துக்கு ஆழ்துளைக் கிணறு போடுவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தோட்டக்கலைத்துறை தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் காய்கறிகள் 2 லட்சத்து 907 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் 77.71 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காய்கறி உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் 9-ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், தற்போது பருவமழை பெய்யாததால் காய்கறி சாகுபடி 50 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.
காய்கறி சாகுபடிக்கு தண்ணீர் பாசனம் முக்கியம். தண்ணீர் பாசன வசதியில்லாத நிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து காய்கறி விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியம் கொடுத்து விவசாயிகளை ஊக்கப்படுத்த தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.