தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) தொடங்குகின்றன.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.71 லட்சம் பி.இ. இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்தியது.
முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. அதன்பின்னர் பொதுப் பிரிவினருக்கான 4 சுற்றுகளைக் கொண்ட ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பின்னர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து உடனடி சிறப்புத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நான்கு கட்ட கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 81,319 பேர் இடங்களைத் தேர்வு செய்து, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான சேர்க்கைக் கடிதம் பெற்றுச் சென்றனர்.
இறுதியாக, பொதுப் பிரிவு கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வில் பங்கேற்க முன்பணம் செலுத்திவிட்டு, பங்கேற்கத் தவறியவர்களுக்கான இறுதி சிறப்புக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்க சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் 1500 பேர் நேரில் பதிவு செய்தனர். இவர்கள் அனைவருக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி, 2019-2020-ஆம் கல்வியாண்டு பி.இ. கலந்தாய்வு மூலம் ஒட்டுமொத்தமாக 82,396 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
தமிழகம் முழுவதும் இடம்பெற்றிருக்கும் இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள இந்த மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) தொடங்கப்பட உள்ளன.
அதே நேரம், அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி உள்பட 4 துறைகளில் சேர்க்கை பெற்றுள்ள பி.இ. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.