மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ்பாய் மோடி தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தார். அவருடன் மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பித்துரையும் வந்திருந்தார். கோயில் அதிகாரிகள் பிரதமரின் சகோதரரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அம்மன் சன்னதி மற்றும் சுவாமி சன்னதியில் கோயில் பட்டர்கள் வரவேற்று சிறப்புத் தரிசன ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அவர்கள் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கோயிலில் அரை மணி நேரம் தரிசனம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் புறப்பட்டுச்சென்றனர்.