வேலூர் மக்களவைத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை
வேலூர் மக்களவைத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

28 வேட்பாளர்கள் போட்டி; தயார் நிலையில் 1,553 வாக்குச்சாவடிகள்
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
 வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உச்சகட்ட பாதுகாப்புப் பணியில் 1,600 துணை ராணுவத்தினர் உள்பட 6 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 களத்தில் 28 வேட்பாளர்கள்: கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி), டி.எம்.கதிர்ஆனந்த் (திமுக), எஸ்.தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி), ஜி.எஸ்.கணேஷ் யாதவ் (பிரகதிஷீல் சமாஜவாதி கட்சி), வி.சேகர் (அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி), ச.திவ்யா (தேசிய மக்கள் கழகம்), ரா.நரேஷ்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி), பேராயர் காட்ஃப்ரே நோபுள் (தேசிய மக்கள் சக்தி கட்சி), மோகனம் (மறுமலர்ச்சி ஜனதா கட்சி), அ.விஜய் பவுல்ராஜா (குடியரசு சேனை) ஆகியோரும், சுயேச்சை வேட்பாளர்களாக அக்னி ஸ்ரீராமச்சந்திரன், பொ.ஆறுமுகம், கே.கதிரவன், எம்.கதிரவன், இ.கருணாநிதி, ச.சண்முகம், கே.சுகுமார், பொ.செல்லபாண்டியன், வி.செல்வராஜ், டி.டேவிட், சு.தமிழ்ச்செல்வன், ஏ.நூர்முகமது, கே.பத்மராஜன், மா.பலராமன், முரளி, பி.ரஷீத் அகமது, இரா.வெங்கடேசன், ஜே.எஸ்.கே. என மொத்தம் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
 1,553 வாக்குச்சாவடிகள்: இத்தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் உள்ளனர். தேர்தலையொட்டி, வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலையே வாக்குப்பதிவுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.
 இத்தேர்தலில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி, மொத்தம் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரங்கள் (விவி பேட்) தலா 1,896 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
 வாக்குப்பதிவு பணிகளில் மொத்தம் 7,552 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு ஊழியர்கள் 210 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாக்குச்சாவடிகள் மட்டுமின்றி கூடுதலாக 497 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
 பாதுகாப்புப் பணியில் 6 ஆயிரம் பேர்: இத்தேர்தலுக்காக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் நாகராஜன் தலைமையில் இதுவரை இல்லாத அளவுக்கு 20 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (துணை ராணுவம்) சேர்ந்த சுமார் 1,600 வீரர்கள், 12 கம்பெனியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 3,937 தமிழக போலீஸார், 400 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு மூன்றடுக்கு நிலையில் துணை ராணுவத்தினருடன் கூடுதல் போலீஸாரும், மற்ற வாக்குச்சாவடிகளில் போலீஸார், ஊர்க் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 தேர்தலையொட்டி, வேலூர் தொகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர, 1,206 போலீஸாருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தபால் வாக்குகள், வாக்கு எண்ணிக்கை நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 7.59 வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மலை கிராமத்தில் வாக்குப் பதிவு: வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெக்னாமலை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி இல்லை. ஒற்றையடிப் பாதையாக 8 கி.மீ. தூரம் காட்டு வழியில் நடந்து செல்ல வேண்டும். 252 ஆண் வாக்காளர்களும், 249 பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 501 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள இந்த மலை கிராமத்தில் ஒரே ஒரு வாக்குச்சாவடி மையம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள், உள்ளிட்ட தேர்தல் பொருள்கள் தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்பட்டன.
 82 வழக்குகள் பதிவு
 தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட ஜூலை 4-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தேர்தல் நெறிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுகவினர் உள்பட 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ. 2,37,80,320 ரொக்கப்பணமும், ரூ. 89,41,800 மதிப்பிலான தங்க நகைகளும், 2 நாட்டுத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை மாலை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அருகே தேர்தல் பறக்கும்படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.11 லட்சம் ரொக்கப்பணமும் அடங்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் குற்றவாளிகள் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com