சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் எலும்புகளால் வடிவமைக்கப்பட்ட எழுத்தாணி திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடியில் தமிழக அரசு சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் பலவகை சுவர்கள், உறைகிணறு உள்ளிட்ட பல தொன்மையான பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது எலும்புகளால் வடிவமைக்கப்பட்ட எழுத்தாணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் எழுதுவதற்காக எலும்புகளை தீயில் வாட்டி பக்குவப்படுத்தி பேனா போன்று உருவாக்கிய எழுத்தாணியாக இவை இருக்கலாம் என அகழாய்வாளர்கள் தெரிவித்தனர்.