தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மணிகண்டன் இருந்து வந்தார். இந்த நிலையில், இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரையை ஏற்று அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்மூலம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கூடுதல் பொறுப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவிப்பதற்கான காரணம் எதுவும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் இருந்து ஒருவர் விடுவிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.