சென்னை: தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கருணாநிதி தொடர்பான புதிய இணையதளத்தை கட்சித் தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக வியாழனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (8-8-2019), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகள், படைப்புகள், உரைகள், மேடைப் பேச்சுகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் 7-8-2019 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா மேடையில், மேற்கு வங்க முதலமைச்சர் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்களால் வெளியிடப்பட்ட ‘முரசொலி’ மலரில் அடங்கியுள்ள அனைத்து கருத்துகளையும் உள்ளடங்கிய தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் பரப்பும் கருவூலமான www.kalaignar.dmk.in என்ற புதிய இணைய தளத்தினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், எம்.எல்.ஏ., துணைச் செயலாளர்கள் எஸ்.டி.இசை, என்.நவின், எஸ்.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.