சென்னை: அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற எனக்கு அவசியமில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக பதிலளித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பு சட்ட பிரிவு 370 ஐ ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்த போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதன்மீது கருத்துக்களை முன்வைத்தார். அப்போது அவர் காங்கிரசை விமர்சித்துப் பேசினார். இது தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதையடுத்து காங்கிரஸ் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, வியாழன் காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் காங்கிரஸ் தயவில்தான் வைகோ எம்.பி ஆகி இருப்பதாக குறிப்பிட்டிருந்ததுடன், வைகோவின் துரோகங்களை பட்டியல் இட்டால் அவர் தாங்குவாரா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற எனக்கு அவசியமில்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தயவில் நான் எம்.பி ஆகி இருப்பதாக அழகிரி குறிப்பிட்டிருந்தார். ஆனால் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவால்தான் நான் எம்.பி ஆக்கியுள்ளேன். 108 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று பேரை எம்.பி ஆக்குவதற்கு 102 திமுக உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது. எனது வேட்பு மனுவினை முன்மொழிந்து 10 திமுக எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டிருந்தனர். ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கூட கையெழுத்திடவில்லை. கலைஞர்தான் என்னை மூன்று முறை மாநிலங்களவை எம்.பி ஆகி அழகு பார்த்தார். எனவே நான் ஒருபோதும் காங்கிரஸ் சார்பில் எம்.பி ஆனதில்லை. இனி ஆகப்போவதும் இல்லை.
என் மீது உங்ளுக்கு ஆத்திரமோ, கோபமோ அல்லது தனிப்பட்ட வன்மமோ இருந்தால் வேறு ஏதாவது கூறுங்கள். ஆனால் இவ்வாறு பேச வேண்டாம். இதுபோன்று அற்ப புத்தி உள்ளவர்களுக்கு பதில் கூற எனக்கு அவசியமில்லை. காங்கிரஸ் மகத்தான துரோகம் இழைத்துள்ளது. ஈழமக்களை கொன்று குவித்த பாவிகள் காங்கிரஸ்காரர்கள்.
அமித் ஷா கூறி நான் பேசியதாகச் சொல்கிறார்கள். காஷ்மீர் தொடர்பான வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் வாக்களிக்கவில்லை. அப்படியென்றால் அவர்கள் பணம் பெற்றுக் கொண்டு விட்டார்களா என்ன?
இவ்வாறு அவர் ஆத்திரமாகப் பேசினார்.