தொடர் கனமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று மட்டும் 82 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தமிழகத்தில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பெய்வது இதுவே முதன்முறை.
இதேபோல் கோவையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பில்லூர் அணையில் இருந்து 70,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடர் மழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சாலைகள் சேதமடைந்துள்ளதால், யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.