சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் வெளிநாட்டு வகையைச் சேர்ந்த அணிகலன்கள் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கீழடியில் தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 13 -ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை பலரது நிலங்களில் தோண்டப்பட்ட 20 -க்கும் மேற்பட்ட குழிகளிலிருந்து மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர், கல்லால் செய்யப்பட்ட மணிகள், உறைகிணறுகள், எலும்பாலான எழுத்தாணி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
இந் நிலையில் புதன்கிழமை போதகுரு என்பவர் நிலத்தில் அகலமான செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்களை விட இவை அகலமானவை என தெரியவந்துள்ளது. முருகேசன் என்பவரது நிலத்தில் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றின் உயரம்
நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே 6 உறைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை 7 -ஆவது உறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு உறையும் ஒன்றரை அடி உயரம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு கிடைத்துள்ள அணிகலன்கள், வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகேட் வகை கல்லில் செய்யப்பட்டவை என்றும், இதனால் பழங்காலத் தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அகழாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.