நீலகிரியில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து வலுத்து வருவதால் உதகை-கூடலூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 405 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மாவட்டத்தில் 10 இடங்களில் 100 மி.மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை காலமான ஜூலை மாதத்தில் இருந்து கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும், முக்கிய நீர்ப் பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தின் நான்கு தாலுகாக்காவிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களுக்குத் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும், உதகை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்குத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால் சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முக்குருத்தி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பைக்காரா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி புதன்கிழமை நிறுத்தப்பட்டது.
இதேபோல, உதகை படகு இல்லத்திலும் மிதி படகுகள் மற்றும் துடுப்புப் படகுகள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. மழை இல்லாத நேரங்களில் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 405 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.