எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கோட்டைப்பட்டினம் செல்வம் மகன் அந்தோணி(39), நாகலிங்கம் மகன் கோவிந்தன்(60), கருப்பையா மகன் செல்வம் (45), ஜலீல் மகன் நவாஸ்(25) ஆகிய 4 பேரும் கடந்த 31-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.
கோட்டைப்பட்டினத்திலிருந்து 35 நாட்டிக்கல் மைலில், நெடுந்தொலைவு அருகே 4 மீனவர்களும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன், நிபந்தனைகளுடன் 4 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
படகுக்கான உரிய ஆவணங்களுடன் அதன் உரிமையாளர்கள் அக்டோபர் 9 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் படகுகள் அரசுடைமையாக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மெருஹான் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஓரிரு நாள்களில் விமானம் மூலம், தாயகம் திரும்புவார்கள் என கடலோரக் காவல் படை உதவி ஆய்வாளர் ரகுபதி தெரிவித்தார்.