கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருவதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
"ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழகத்தில் மட்டும் கடந்த 7 மாதங்களில் 1, 200-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த சில நாள்களில் சென்னையில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை நீரை தேங்கவிடக் கூடாது என்று அறிவுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.