தஞ்சாவூர், பேராவூரணியில் உள்ள மண்டபம் காவல் ஆய்வாளரின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி. நீலகண்டன் (51). இவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் பிரிவில் ஆய்வாளராக 2018-ஆம் ஆண்டில் பணியாற்றினார். 2018, டிச. 28-ஆம் தேதி அப்பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையிட்டு, நீலகண்டனிடமிருந்து ரூ. 1.25 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.
பின்னர், மீமிசல் காவல் நிலையத்துக்கு நீலகண்டன் மாற்றப்பட்டார். தற்போது, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கரூப்ஸ் நகரில் உள்ள நீலகண்டன் வீட்டில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் சோதனையிட்டனர். அப்போது, வீட்டில் இருந்த வீடு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதேபோல, பேராவூரணி அருகே கொரட்டூரில் உள்ள நீலகண்டனின் வீட்டிலும் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட போலீஸார் சோதனையிட்டனர். அங்கும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.