அடித்தது ஜாக்பாட்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்வு!

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், தற்போது அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
அடித்தது ஜாக்பாட்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்வு!


சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காவிரியில் கரைபுரண்டு ஓடி மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், தற்போது அணைக்கு நீர்வரத்து 2.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.65 லட்சம் கன அடியாக இருந்தநிலையில், அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது.

தற்போது அணையின் நீர்மட்டம் 85.43 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 67 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 18 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் 47.53 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் குடிநீர்  தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. 

இதனால் கபினி அணையின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் நீர் வரத்து காரணமாக,  காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.  

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,25,000 கன அடியாக அதிகரித்தது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  வெள்ளிக்கிழமை காலை 54.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 73.60 அடியாக உயர்ந்தது.  கடந்த இரு நாள்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 19.10 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவு இதே அளவில் இருந்தால்,  ஒரு வாரத்தில் மேட்டூர் அணை நிரம்பும்.  மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் நாளை தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  மேட்டூர் நீர் தேக்கம் பகுதியில் உள்ள செட்டிப்பட்டி, ஏமனூர், கோட்டையூர், ஒட்டனூர், பண்ணவாடி, நாகமரை பரிசல்துறைகளில் படகுகள் இயக்க மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத் துறை அறிவித்துள்ளதால், மூன்றாவது நாளாக மீனவர்கள் காவிரியில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. 

அணையின் நீர் மட்டம் 80 அடியைத் தாண்டியதால் மேட்டூர் நீர் தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த ஜலகண்டேசுவரர் ஆலயமும் அதன் முகப்பில் உள்ள நந்தி சிலையும் மீண்டும் நீரில் மூழ்கின. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால்,  மேட்டூர் அணையின் வலதுகரையிலும், இடது கரையிலும் பெதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  காவிரி கரையில் வெள்ள அபாயம் உள்ளதால்,  வருவாய்த் துறை ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

தொடர்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதைக் காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மேட்டூருக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.  இதனால் மேட்டூர்-மைசூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com