சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் காரணமாக காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகங்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாயன்று 100 அடியைத் தாண்டியது. காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அத்துடன் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை செவ்வாயன்று திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகங்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 2.25 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.
நீர்திறப்பு குறித்து அவ்வப்போது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.