என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ரூ.91.78 கோடியில் நிறுவப்பட்டுள்ள புதிய மண்கொட்டும் இயந்திரத்தை மத்திய நிலக்கரி அமைச்சக செயலர் சுமந்தா செளத்ரி அண்மையில் தொடக்கி வைத்தார்.
முன்னதாக, என்எல்சி சுரங்கங்களையும், அனல் மின் நிலையங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து, 2-ஆவது சுரங்கத்தில் ரூ. 91.78 கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மண்கொட்டும் இயந்திரத்தை தொடக்கி வைத்தார். இந்த இயந்திரம் மணிக்கு 11 ஆயிரம் டன் மேல் மண்ணை கன்வேயரிலிருந்து பெற்று கொட்டும் திறனுடையது. மொத்தம் 1,150 டன் எடை கொண்டது. இதன் 90 சதவீத பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த இயந்திரம் நெய்வேலி சிறப்பு சுரங்க இயந்திரங்கள் நிர்மாணிக்கும் பணிமனையிலேயே நிர்மாணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தை சுமந்தா செளத்ரி பார்வையிட்டார். பின்னர் நிறுவன உயர் அதிகாரிகளையும், தொழிற்சங்கம் மற்றும் பொறியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
பல்கலை.யில் திறன் மேம்பாட்டு மையம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.3.60 கோடியில் அமைக்கப்பட்ட திறன்மேம்பாட்டு மையத்தையும் சுமந்தா செளத்ரி திறந்து வைத்தார். இந்த மையமானது சுமார் 11,800 சதுர அடிப்பரப்பில் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கட்டடத்தின் மேல்தளத்தில் ரூ.1.75 கோடியில் வகுப்பறைக் கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வின்போது என்எல்சி இந்தியா தலைவர் ராகேஷ்குமார், இயக்குநர்கள் ஆர்.விக்ரமன், பிரபாகர் செளக்கி, ஷாஜி ஜான், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்பிரமணியன், பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.