புதுவை யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் நடைபெறும் வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக முதல்வர் வே.நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ஏனாம் பிராந்தியம் ஆந்திர எல்லைப் பகுதியில் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.
அங்கு பெய்து வரும் பலத்த மழை, கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏனாம் நகருக்குள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வெள்ளம் புகுந்தது.
இதனால், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஏனாம் தொகுதியின் எம்எல்ஏவும், சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் வெள்ள மீட்புப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அறையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது: ஏனாமில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நகர்ப் பகுதிகளில் 4 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்தது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணப் பொருள்களை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.