நல்ல தீர்ப்புகள் வழங்க வழக்குரைஞர்களின் சேவை முக்கியம் என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரவிச்சந்திர பாபு.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் குற்றவியல் நீதிமன்றம் -2, வேப்பந்தட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களைத் திறந்து வைத்து மேலும் அவர் பேசியது:
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருந்தால்தான் அது செல்லுபடியாகும். அதேபோல், ஒரு வழக்குக்கு நீதிபதியும், வழக்குரைஞரும் இரண்டு பக்கங்கள். இவை இரண்டும் நாணயமாக இருக்க வேண்டும். வழக்குரைஞர் தொழிலை மட்டுமே ஓய்வு காலம் என வரைமுறையில்லாமல் சுதந்திரமாக செய்யமுடியும். அப்படிப்பட்ட வழக்குரைஞர்கள் தங்களது தொழிலில் கடமையுடன், உறுதியோடு, நாணயமாக இருக்கவேண்டும். நீதிபதிகள் நல்லத் தீர்ப்புகளை எழுத வேண்டும். இதில் வழக்குரைஞர்களின் சேவை மிக முக்கியம். ஒரு வழக்குத் தொடர்பாக இரு வழக்குரைஞர்கள் வாதிடும் போது, அவற்றை முழுமையாகக் கேட்டறிந்து நிரபராதிகள் தண்டிக்கப்படாத வகையில் தீர்ப்பு வழங்கவேண்டும்.
பாமர மக்கள் நீதிமன்றங்களை நாடி வந்து, தீர்ப்பு பெற்றுச் செல்லும்போது, அவர்களது நம்பிக்கை வீண் போகாமல், நேர்மையாக தீர்ப்பு கிடைத்துள்ளது எனக் கூறும் வகையில் தீர்ப்புகள் அமையவேண்டும்.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது. வழக்குகள் குறையும் போது, நீதிமன்றங்கள் பெருகுவதும் குறையும். ஒரு வழக்கு வரும்போது, அவற்றை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் முன், சமரசத் தீர்வு மையத்தை அணுகி ஒருவருடன் ஒருவர் பேசி தீர்வு ஏற்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு வழக்குகள் குறையும்போது, வழக்குகளின் தேக்க நிலையும் குறைய வாய்ப்புள்ளது.
இந்த சமரசத் தீர்வு மையம் மூலம் தீர்வு கிடைக்கும்போது கால மற்றும் பண விரயத்தைத் தவிர்க்கலாம். வழக்குரைஞர்கள் வழக்குகளை சமரசத் தீர்வு மையத்தில் தீர்வு செய்துகொள்ள வேண்டும். தீர்வு ஏற்படாதபட்சத்தில் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாம் என்றார் ரவிச்சந்திர பாபு.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பேசியது: வழக்குரைஞர்கள் விசாரணைக்குத் தேவையான தகவல்களை திரட்டும் வகையில் நூலக வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தீர்ப்புகள் மற்ற தீர்ப்புகளுக்கு உதாரணமாக அமையவேண்டும். நல்ல தீர்ப்பு அமைய வழக்குரைஞர்கள் தங்களது வாதத் திறமையை வெளிக் கொணர்ந்து வாதிடவேண்டும். அப்போது தான், பொதுமக்களின் உரிமையை நிலை நாட்டும் வகையில் நியாயமான தீர்ப்பு அமையும். வழக்குகளை ஒத்திவைப்பது, நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும். ஒரு பிரச்னையை வழக்காக எடுத்துக்கொள்ளாமல், சமரசத் தீர்வு மூலம் தீர்வு காண பல சாத்தியக் கூறுகளை உருவாக்க வேண்டும்.
மேலும், மாற்றுமுறைத் தீர்வு மூலம் வழக்குகளுக்குத் தீர்வுகாண வேண்டும். முடியாத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தீர்வு காணலாம் என்றார் நீதிபதி பி. புகழேந்தி.
இவ்விழாவில், மாவடட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி, அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் டி. தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பெரம்பலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி டி. லிங்கேஸ்வரன் வரவேற்றார். நிறைவில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ். கிரி நன்றி கூறினார்.