தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
தென்மேற்குப் பருவக்காற்று வலுவாக இருப்பதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். குறிப்பாக, தென் கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு அடுத்த 2 நாள்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.