கேட் எனப்படும் பட்டதாரி நுண்ணறி தேர்வில், 2020-ஆம் ஆண்டு முதல் உயிரி மருத்துவப் பொறியியல் பாடமும் சேர்க்கப்பட உள்ளது.
அரசின் கல்வி உதவித்தொகையுடன் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கேட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்தத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில், சில நிறுவனங்கள் பணியாளர்கள் தேர்வையும் நடத்துகின்றன. இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்தத் தகுதித் தேர்வில் புதிய பாடப் பிரிவைச் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவில் ஆராய்ச்சிக் கழகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்களிடையே போதுமான அளவுக்கு ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் உயிரி மருத்துவத் தொழில்நுட்பத் துறை பெரிய அளவில் வளர்ச்சி பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றவும், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கிடையே இளநிலை உயிரி மருத்துவப் பொறியியல் பாடத் திட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையிலும், கேட் தேர்வில் இந்தப் பாடத்தையும் சேர்ப்பது என சென்னை ஐஐடி கல்விக் குழு இயக்குநர் வி.ஜெகதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் மூலம், வரும் 2020-ஆம் ஆண்டு முதல் கேட் தேர்வில் இந்தத் தாளும் இடம்பெறும். இதற்கான பாடத்திட்டத்தை http://gate.iitd.ac.in.syllabi.php என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 2020-இல் கேட் தேர்வை தில்லி ஐஐடி நடத்த உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.