சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற சமபந்தி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டின் 73வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றினார். மேலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதல்வர் இன்று விருது வழங்குகிறார்.
இதற்கிடையே, தமிழகம் முழுவதுமுள்ள 448 கோவிலில்களில் இன்று சமபந்தி விழா நடைபெறுகிறது. சென்னை கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு மக்களோடு அமர்ந்து உணவருந்தினர். திருவான்மியூர் மருதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். மற்ற மாவட்டங்களில் நடைபெறும் சமபந்தி விழாவில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, இன்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழிசை சௌந்தரராஜன் ராக்கி கயிறு கட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.