நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வு என்பதால் அத்திவரதரை தரிசிக்க வந்ததாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினரான கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தெரிவித்தார்.
அத்திவரதரை தரிசிக்க வந்திருந்த முஸ்லிம் பிரமுகரும், திமுக சட்டப் பேரவை உறுப்பினருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மேலும் கூறியதாவது:
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் அத்திவரதரை தரிசிக்க வந்தேன்.இறைப்பணியில் உறுதியாக இருப்பவன் நான்.
தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கும் சென்றிருக்கிறேன். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் உள்ள மூலவரான வரதராஜப் பெருமாளையும் நேரில் வந்து தரிசித்துள்ளேன்.
அத்திவரதர் பெருமாளை பார்ப்பது இதுவே முதல் முறையாகும். சட்டப் பேரவை நடந்து கொண்டிருக்கும் போது அத்திவரதரைப் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டும் வழங்கினார்கள். அந்த அனுமதிச்சீட்டு மூலமாக அத்திவரதரை தரிசிக்க வந்தேன். அத்திவரதர் தரிசனம் சிறப்பானது என அவர் தெரிவித்தார்.