தொழில் நிறுவனங்களில் பல பணிகளுக்குப் பயன்படும் வகையிலான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபாட்டை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
கிராஸ்ப் மேன் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபாட் சென்னை ஐஐடி பொறியியல் வடிவங்கள் துறையின் கீழ் இயங்கிவரும் தானியங்கி ஆய்வகப் பேராசிரியர் அசோகன் தொண்டியாத் தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் அசோகன் தொண்டியாத் கூறியதாவது: தொழில்நிறுவனங்களில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் புரிதல், கட்டளையை ஏற்று நடத்தல், இடம்பெயர்தல் ஆகிய திறன்களுடன் இந்த ரோபாட் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட சூழல்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டது. இந்த ரோபாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் கைகள், மனித கைகளுக்கு இணையாக பல்வேறு வடிவங்களிலான பொருள்களை எளிதாகக் கையாளும் திறன் கொண்டது என்றார் அவர்.